ரணில் விக்ரமசிங்க - பொன்சேகா பிரதிநிதிகளிடையே இரகசியப் பேச்சுவார்த்தை
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் இரண்டு பிரதிநிதிகளுக்குமிடையே கடந்த செவ்வாய்க்கிழமை இரகசிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை களமிறக்குவது குறித்து இணக்கமொன்றை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையின் போது குறித்த யோசனைக்கு எதிர்க்கட்சித் தலைவர் சாதகமான பதிலை வழங்கியிருப்பதாகவும் தெரியவருகிறது.
இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் பிரசன்னமாகியிருக்கவில்லையெனவும், எனினும் இந்தச் சந்திப்புக் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அன்றைய தினமே, எதிர்க்கட்சிக் கூட்டமைப்புத் தலைவர்களை அழைத்து இதுகுறித்து அறிவித்திருப்பதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஜெனரல் சரத் பொன்சேகா போட்டியிட்டால் அரசாங்கத்திலுள்ள கட்சியொன்றும் அதற்கு ஆதரவு வழங்க விருப்பம் தெரிவித்துள்ளது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் வரை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர்கள் யார் என்பது குறித்த தகவலை வெளியிடக் கூடாது எனவும் இதுதொடர்பாக ஜே.வி.பி.யுடனும் இணக்கமொன்றை ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமெனவும் எதிர்க்கட்சிக் கூட்டமைப்பின் தலைவர்கள் இதன்போது தீர்மானித்துள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.