புஷ் ‐ ஒபாமாவை மகிந்த ராஜபக்ஷ விமர்சித்த ஒலிநாடாக்கள் வெளிநாட்டு தூதரங்கள் கையில்



அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்

மற்றும் தற்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமா ஆகியோருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, கடந்த திங்கட்கிழமை அலரி மாளிகையில் நடைபெற்ற கூட்டமொன்றில் வைத்து வெளியிட்டிருந்த கருத்துக்கள் அடங்கிய ஒலிநாடாக்களை வெளிநாட்டு தூதரங்களுக்கு வழங்கியவர்கள் யார் என்பதை அறிய விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அந்த கூட்டத்தின் போது, மேற்குலநாடுகளின் தலைவர்கள் குறிப்பாக அமெரிக்க தலைவர்களை விமர்;சித்து, அவர்களுக்கு அவதூறு ஏற்படும் வகையில் நீண்ட உரையொன்றை ஆற்றியுள்ளதாகவும் ஜோர்ஜ் புஷ் ஆட்சியில் இருந்த காலத்தில் பின்லாடன் இருக்கும் இடத்தைக் கூட அறியமுடியாமல் போனதாகவும் தற்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமா பெரிதாக பேசிக் கொண்டு நடவடிக்கைகளை எடுக்க தவறியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இரண்டு வருடம் என்ற குறுகிய காலத்தில் உலகில் மிகவும் பயங்கரமான அமைப்பான விடுதலைப்புலிகள் அமைப்பையும் அதன் தலைவர் உள்ளிட்டவர்களை கொலை செய்தமை விடயங்கள் பற்றி கூட்டத்தில் விளக்கியுள்ள ஜனாதிபதி, இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்ட தமக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் ஆலோசனைகள் அவசியமற்றது எனவும் அமெரிக்காவுக்கும் மேற்குல நாடுகளுக்கும் ஏற்றவாறு  செயற்பட தான் தயாரில்லை எனவும் கூறியுள்ளார்.

அமெரிக்கத் தலைவர்களையும், அந்த நாட்டின் கொள்கைகளையும் கடுமையாக விமர்ச்சித்து ஜனாதிபதி உரையாற்றிய பின்னர், அங்கு சென்றுள்ள ஜனாதிபதியின் ஊடகப் பிரிவினரும், பாதுகாப்பு அதிகாரிகளும், ஜனாதிபதியின் உரையடங்கிய ஒளி‐ ஒலி நாடாக்களை தம்வசம் பெற்றுக் கொண்டனர். அத்துடன் இந்த உரையின் விடயங்களை எந்த ஊடகங்களிலும் வெளியிடக் கூடாது என எச்சரித்துள்ளனர்.

 கூட்டத்தில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களின் ஒலி‐ஒளிநாடாக்களை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவினர் கைப்பற்றிய பின்னரும், அதன் உரையடங்கிய ஒலிநாடா தூதரகங்களுக்கு கிடைத்தமையானது பாரதூரமான சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் எவ்வாறு அந்த ஒலிநாடா தூதரகங்களுக்கு கிடைத்தது என்பதை அறிய விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே முன்னாள் ஜனாதிபதியின் கீழ் அவரது ஊடகப் பிரிவில் பணியாற்றிய ஒருவரினால், எதிர்க்கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவருக்கு வழங்கப்பட்டிருக்கலாமா என்ற சந்தேகமும் தற்போது ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment